கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மக்கள் எழுச்சி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ வணக்கம்

தமிழீழ விடுதலைக்கு தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள பொது இடத்தில் எழுச்சியுடன் நினைவேந்தல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் இங்கு திரண்டிருந்தனர். இளைஞர், யுவதிகள், சிறுவர், முதியவர்கள் என இங்கு திரண்டிருந்து மக்கள் வெள்ளம் தமிழீழ விடுதலை வேண்டிய அவர்களின் ஆவலை வெளிப்படுத்தியிருந்தது.

தமிழீழ விடுதலைக்காக தமது மூன்று பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் தாயார் சரியாக 6.05 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றினார். அதைத் தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் உரித்துடையோர் தீபம் ஏற்ற துயிலும் இல்லப் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

இங்கு திரண்டிருந்த பெற்றோர்கள் மாவீரர்களான தமது பிள்ளைகளை நினைந்து மனமுருகி அழுத காட்சி அந்த இடத்தைச் சோகமயமாக்கியது. தமிழீழம் என்ற தாரக மந்திரத்தை பலரும் உச்சரித்துக்கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் கட்சி பேதம் இன்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை படையினர் தமது பிரிகேட் தளமாக மாற்றியமைத்து அங்கு முகாமிட்டிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக உள்ள காணியில் நினைவேந்தல் எழச்சியுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்