அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டத்திற்கு தம்மை புறக்கணித்துள்ளதாக கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகள் கவலை

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றிருந்தது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தனும் புறக்கணித்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றைய தினம் (21.08) இரவு நடைபெற்ற முக்கிய சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் உள்ள கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படும் கட்சிகள், பாராளுமன்ற பிரதிநித்துவத்தை பெற்றிருக்காத சில கட்சிகள், தமிழரசுக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் என்பன கலந்து கொண்டிருந்தன.

அனைத்துக் கட்சிக் கூட்டமாக 20 வது திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களைப் பெறும் முகமாக இக் கூட்டம் நடைபெற்றிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியன பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக இருப்பினும் அவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக சந்திப்புக்களை செய்யும் போது பங்காளிக் கட்சித் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் கூட்டமைப்பின் தலைவர் கூட பங்காளிக் கட்சிகளை அழைக்காது அவரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.

எனவே, எதிர்காலங்களில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டங்களிலும் தம்மையும் உள்வாங்க வேண்டும் என ஈரிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் ஜனாதிபதியிடம் எழுத்து மூலமாக கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்