சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் செய்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்தது முதல் அதிமுக கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. 6 மாத இழுபறிக்கு பின்னர் பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இரு அணிகள் ஒன்றாக இணைந்தால் சிக்கல்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தினகரன் தலைமையிலான அணி தனியாக விஸ்வரூபம் எடுத்தது. ஈபிஎஸ் மற்றும் தினகரன் அணிகளுக்கு இடையே சண்டை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அதிமுக நிர்வார்கள் பலரின் கட்சி பதவிகளை பறித்து புதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்து வருகிறார்.
இந்நிலையில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். சேலம் மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம் அந்த பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ஜி.வெங்கடாஜலம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக எஸ்.இ.வெங்கடாஜலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுச் செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தினகரன் தெரிவித்துள்ளார்.