தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி சிரமதானம் செய்யப்பட்டுள்ளது! (படம்,காணொளி)

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குப் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி இன்றையதினம் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான இராசையா பார்த்தீபன் எனும் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து ஈழப் போர்களில் பங்குபற்றியதோடு மட்டுமன்றி ஈழத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் கொடுமைகளை எதிர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 1987ஆம் ஆண்டு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது உயிர் பிரியும்வரை கொள்கை தவறாது அந்த அஹிம்சைப் போராட்டத்தைக் கையிலெடுத்த பார்த்தீபனுக்காக நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பின்வீதியில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

போர்க் காலங்களில் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்த, தியாகி திலீபனின் மேற்படி தூபியே இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்