தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆம் திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற சமகால அரசியல் நிலமைகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சகல மாகாணசபைகளுக்கும் ஒரே சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலமான 20 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
இங்கே அதிகார பகிர்வு தேவை எனப் போராடியவர்கள் தமிழர்கள் மட்டுமே. அந்தவகையில் இந்திய- இலங்கை ஒப்பந்தம் ஊடாக மாகாணசபைகள் உருவாக்கப்படுவதற்காக அதிகம் பாடு பட்டவர்கள் தமிழர்கள்தான்.
நாடாளுமன்றம் தாங்கள் நினைத்த நேரத்தில் மாகாணசபைகளை கலைத்து விட்டு நினைத்த நேரத்தில் தேர்தலை நடத்துவதன் ஊடாக மாகாண செயற்பாடுகளிலும் தலையிடுவதற்காக முயற்சிக்கின்றது.
இதனால் ஊவா மாகாணம் மேற்படி சட்டமூலத்தை ஏற்கனவே நிராகரித்திருக்கின்றது. இதேபோல் வட.மாகாணம் அதனை நிராகரிக்கும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த 20ஆம் திருத்தத்தை எதிர்க்கவேண்டும்” என சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.