நீதி மறுக்கப்பட்டவர்களாக தொடர்ந்தும் வடக்கு மக்கள்: சம்பந்தன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள், பல வருடங்களாக தமது அன்பானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிய முடியாதவர்களாகவும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவும் தொடர்ந்தும் இருந்துவரும் நிலைமை கவலையளிக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பலவந்தமான காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்களது சர்வதேச தினம் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களது உறவினர்கள், தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற விடயத்தை வெளிப்படுத்துமாறு தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆயுத மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு எட்டு வருடங்கள் கடந்துள்ள போதும், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுடைய பிரச்சினைகள் இதுவரை திருப்திகரமான வகையில் கவனம் செலுத்தப்படாத நிலையே காணப்படுகின்றதென சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்ததென்ற உண்மையை தெரிந்துகொள்வது அவர்களது உறவினர்களது உரிமை எனக் குறிப்பிட்டுள்ள சம்பந்தன், இவ்விடயம் தொடர்பாக அரசாங்கம் உயர்ந்த பட்ச கவனத்தை செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். அதே சந்தர்ப்பத்தில், குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதோடு, இனிவரும் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதென்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் செயற்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் குறித்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்