புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் கூட்டு அரசு ஈடுபட்டுள்ள நிலையில், அதனைத் தோற்கடிப்பதற்கான பரப்புரைப் போரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே நேரடியாகக் களமிறங்கி வழிநடத்துவார்.
இதற்காக ‘எலிய’ (வெளிச்சம்) எனும் சிவில் அமைப்பொன்றை உருவாக்கியுள்ள அவர், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அதன் செயற்பாட்டை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.
அமைப்பின் அறிமுக நிகழ்வு மிகப் பெரியளவில் பொரலஸ்கமுவையில் நடைபெறவுள்ளது. அதற்குத் தலைமை தாங்குமாறு தனது சகோதரரான முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு, கோத்தபாய அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான தயான் ஜயதிலக, இராஜதந்திரியான தாமரா குணநாயகம், முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா உட்படப் பல்துறைகளிலும் உயர் பதவிகளை வகிப்பவர்கள் வெளிச்சம் அமைப்பின் அங்கத்தவர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.
புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுமாக இருந்தால் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாக இருக்கின்றது. அதைத் தோற்கடிப்பதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கமாகும்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது இந்த அமைப்பு பொது எதிரணியின் தேர்தல் பரப்புரைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதுடன், 2020ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பயணத்துக்கான ஆரம்பமாகவும் இது அமையும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காடுகின்றனர்.