சிங்களவர்கள் மோசமானவர்கள் அல்ல சம்பந்தன் புகழாரம்

எதிர்க்கட்சித் தலைவர் திரு.இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தூதுவர் அலிஸ் வெல்ஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.

இச்சந்திப்பு அமெரிக்கத் தூதுவரின் அதுல் கேசாப்பின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது அரசியல் நிலைமைகள், குறிப்பாக அரசியலமைப்புச் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தூதுவருக்கு விளக்கமளித்தார்.

நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளினால் தமிழர்கள் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதோடு நாட்டில் தமிழ் மக்களது உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 15 இலட்சம் மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ளதோடு, நாட்டில் எஞ்சியுள்ள தமிழ் மக்களாவது உரிய கௌரவத்துடன் வாழவேண்டுமெனவும் புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்குத் திரும்பிவர வேண்டும் தாம் விரும்புவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் வாழுகின்ற சகல மக்களினதும் கௌரவத்தைக் காப்பாற்றுவதாகவும், பேணக்கூடியதாகவும் அமையக் கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சி தலைவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை அரசியலமைப்பு உருவாக்குவதில் அதிகளவான ஆரம்பக்கட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இச் செயற்பாடுகள் தோல்வியடைய இடமளிக்கப்படக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதயசுத்தியுடனான அதிகாரப் பங்கீடு இன்றியமையாதது எனவும், மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இடங்களில் தங்களது அன்றாட விடயங்களில் தாமே முடிவுகளை மேற்கொண்டு செயற்படக்கூடியதாக அவை அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சிங்கள மக்கள் மோசமானவர்கள் அல்ல எனவும், ஆனால், சில அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் புதிய யாப்பு மூலம் நாடு துண்டாடப்படப் போகின்றதென்ற பயத்தைத் தோற்றுவிக்க முயற்சிப்பதாகவும் இரா.சம்பந்தன் உதவி இராஜாங்கச் செயலாளர் தூதுவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

தாம் நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை எனவும், எனினும் நாட்டில் வாழுகின்ற ஒவ்வொருவரும் தாங்கள் இந்த நாட்டுக்குச் சொந்தமானவர்கள் என்றும், இந்த நாடு தங்கள் எல்லோருக்கும் சொந்தமானதென்றும் உணரக்கூடிய வகையில் அமைய வேண்டுமென்றும் கூறினார்.

இந்த நாட்டில் இதுவரை காலமும் ஒவ்வொருவரும் கணிக்கப்பட்டதைப் போல இனிமேலும் தமிழ் மக்கள் கணிக்கப்படக்கூடாது எனவும், இந்த நாட்டில் வாழுகின்ற சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும் சமமானவர்களாகவும் கௌரவமானவர்களாகவும் நாம் கணித்துச் செயற்படுவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடாது எனவும் உயர்ந்த அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்த அவர், இந்த நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து செயற்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியலமைப்புக்குப் பல்வேறு கட்சிகளினதும் ஒப்புதலைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதெனவும், அதனால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினூடாக நாட்டு மக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது, இனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்லவென்றும், அனைத்து மக்களுக்கும் பயன் தரக்கூடிய அதிகாரப் பகிர்வு சம்பந்தப்பட்ட விடயமாகும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆயுதப் படையினர் தங்கியிருக்கும் காணிகள் விடுவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்குக் கையளிக்கப்பட வேண்டும் எனவும் அக்காணிகளுக்குத் திரும்பி வருவதற்கு அவர்கள் உரிமையுடையவர்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தமது காணிகளைக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும் இவ்வேளையில் ஆயுதப்படையினர் இக் காணிகளில் தங்கியிருந்து அதனைத் தமது உபயோகத்துக்குப் பயன்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாகக் கவனம் செலுத்தப்பட்டு, நம்பத்தகுந்த விசாரணைகள் மூலம் உண்மைகள் அறியப்பட்டுக் காணாமல் போனவர்களது குடும்பங்கள் ஏதாவது வகையில் மன ஆறுதல் அடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கொடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருந்தபோதும் அச்சட்டம் இன்னும் மாற்றியமைக்கப்படவில்லை என்பதையும் தூதுவர் அலிஸின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் நியாயமற்ற வகையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொள்கையில் உறுதிப்பாடுடைய ஒரு தலைவரைச் சந்திக்க கிடைத்தமையையிட்டு தாம் பெருமையடைவதாக இதன்போது அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தூதுவர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனான அதன் தொடர்புகளைத் தொடர்ந்தும் பேணிவரும் எனவும் அவர் உறுதியளித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்