சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலையின் முக்கிய சந்தேகநபரன சுவிஸ்குமாரைக் காப்பாற்றியதன் காரணமாகவே விஜயகலாவைப் பதவி விலகுமாறு தான் கேட்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ச தனது கீச்சகத்தில் நேற்று இது தொடர்பில் பதிவிட்டிருந்தார்.
‘‘புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முதன்மைச் சந்தேக நபரை திருமதி விஜயகலா மகேஸ்வரன்தான் காப்பாற்றியதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். சிறுவர் விவகார அமைச்சரே இது போன்ற கீழ்த்தரமான விடயங்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது. உடனடியாக பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’’ என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வித்தியா படுகொலை வழக்கு விசாரணையில் முக்கிய சந்தேகநபரான சுவிஸ்குமார் சாட்சியமளிக்கையில், மக்கள் என்னை மின்கம்பத்தில் கட்டி வைத்திருந்தபோது அங்கு வந்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்தான் விடுவித்தார். இரண்டு மணி நேரம் என்னுடன் நின்றிருந்தார் என்று தெரிவித்திருந்தார்.
இதனை அடிப்படையாக வைத்தே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.