பாதுகாப்புப் போர்வை அணிந்தவர்களே பாரதூரமான குற்றச்செயலில் ஈடுபட்டனர்!விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!

வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் செம்மணியில் நடைபெற்ற, மாணவி கிரிசாந்தி குமாரசாமி சிறிலங்கா இராணுவத்தினரால் பலாத்காரத்திற்குட்படுத்தி படுகொலை செய்த கொடூர நிகழ்வின் 27 ஆம் ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். அந்த அறிக்கை விபரம் வருமாறு…

மாணவி கிருசாந்தி குமாரசாமி தமது 21 ஆவது பிறந்த நாள் வரை வாழவில்லை. வாழவிடவில்லை என்பது தான் பொருத்தம். அவரின் இறப்பு இயற்கை மரணம் அன்று. அறுவர் அடங்கிய ஒரு இராணுவ மிலேச்சக்கூட்டம் அப் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்தியது மட்டுமன்றி கொன்றும் புதைத்துவிட்டது.

யுத்தத்தின் போது எமது பொதுமக்களுக்கு நேர்ந்த கதிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. வெளிவராமல் எத்தனையோ பலாத்காரங்களும் கொலைகளும் நடந்தேறின. இராணுவத்தினர் கையில் நடைபெற்ற குற்றச்செயல்களுக்கு ஒரு அடையாளமாக கிருசாந்தியின் பலாத்காரமும் கொலையும் அமைந்தன.

வட மாகாணசபை உறுப்பினர் சிவிஜிலிங்கம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து 21 மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கியும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கியும் இத்துக்க நிகழ்வை முன்னெடுத்துள்ளோம்.

இச் செம்மணி வெளி அக்காலத்தில் ஒரு திறந்த மனிதக் கொல்களமாக மாற்றப்பட்டிருந்தது. இப்பாதையால் பயணிக்கின்றவர்கள் அடுத்த எல்லையை தாண்டும் வரை அவர்களின் உயிர் அவர்கள் வசம் இருந்துவிட்டால் அவர்கள் புண்ணியம் செய்தவர்களாகக் கருதப்பட்டார்கள்.

வேலியே பயிரை மேய்வது போல் பாதுகாப்புப் போர்வை அணிந்தவர்களே பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர். இந்த நாட்டில் இது போன்ற அவலங்கள் இனிமேலும் நடவாதிருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே சமஷ்டி முறையிலான சுயாட்சி அதிகாரங்களை வேண்டி நாம் அரசுடன் மோதிக் கொண்டிருக்கின்றோம். பிழைகள் விசாரிக்கப்படலாம். தண்டனைகள் வழங்கப்படலாம். ஆனால் பிரிந்த உயிரை மீண்டும் திரும்பித் தரக்கூடிய வல்லமை எவருக்கு உண்டு?

செல்வி கிருசாந்தியினதும் அவரது தாயார், சகோதரன் பிரணவன் ஆகியோரினதும் அவர்தம் அயலவர் கிருபாகரனதும் மறைவு எம் மக்களால் இன்றைய நாள்(07/09/2017) நினைவு கூறப்பட்டது. இவ்வாறு வருடா வருடம் நினைவு கூறப்பட வேண்டும். எமது மக்களின் கடந்த கால சோக வாழ்க்கையின் அடையாளம் இவர்கள் மறைவு.

அவர்கள் அனைவரதும் உற்றார், உறவினர்களுக்கு இச் சந்தர்ப்பத்தில் எமது ஆழ்ந்த துக்கங்களையும் அனுதாபங்களையும் தெரிவிப்பதைவிட எம்மால் என்ன செய்ய முடியும்? இவ்வாறான மிலேச்சச் செயல்கள் எம்மிடையே இனியும் ஏற்படாதிருக்க இறவன் வழி வகுப்பானாக எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்