“வடக்கில் உள்ள சில ஊடகங்கள் நான் தெரிவிக்கும் கருத்துக்களைத் திட்டமிட்டுத் திரிபுபடுத்தி வெளியிடுகின்றன. இதனால் மக்களுடன் தவறான புரிதல்கள் ஏற்பட வழிவகுக்குப்படுகின்றது”
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுதந்திர ஊடக இயக்கப் பிரதிநிதிகளு டனான சந்திப்பில் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுக்கும், கொழும்பில் செயற்படும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான சந்திப்பு கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பிலேயே முதலமைச்சர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
“கடந்த அரசின் காலத்தில் வடக்கு – கிழக்கில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குற்றமிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் வகையிலான நிலை காணப்படுகின்றது.
விசாரணையை முன்னெடுப்பதற்கும், நீதியின் முன்நிறுத்துவதற்கும் பன்னாட்டுச் அழுத்தம் முக்கியமானது. ஊடகவியலாளர்கள் கொலை குறித்து விசாரணை நடத்த அரச தலைவர் ஆணைக்குழுவை நியமித்தால் நன்று” என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
“வடக்கில் உள்ள சில ஊடகங்களில் நான் தெரிவிக்கும் கருத்துக்களை திட்டமிட்ட வகையில் திரிவுபடுத்தி வெளியிடப்படுகின்றன.
இதனால் மக்களுடன் தவறான புரிதல்கள் ஏற்பட வழிவகுக்கின்றது. வடக்கில் நான் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு முற்றும் முரணான வகையிலேயே தென்னிலங்கைப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு என்னைப் பயங்கரவாதியாக சித்தரிக்க முயல்கின்றன” என்றும் முதலமைச்சர் இதன்போது தெரிவித்தார்.