12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்தவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவருக்கே இவ்வாறு தண்டணை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
2012ஆம் ஆண்டு செப்டெம்பர் வன்புணர்வு இடம்பெற்றது. சிறுமியின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
சந்தேகநபரைக் கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் முல்லைத்தீவு நீதிவான் மன்றில் முற்படுத்தியிருந்தனர். வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் மன்றத்தில் இடம்பெற்று வந்தது. 6 மாதங்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டு பின்னர் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பகிர்வுப்பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளி இரண்டு இலட்சம் ரூபாவை இழப்பீடாகச் செலுத்துமாறும் அதைச் செலுத்தத் தவறின் மேலதிகமாக இரண்டு வருடங்கள் கடூழியச் சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டனைத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
தண்டப்பணமாக 10 ஆயிரம் ரூபா செலுத்துமாறும் அதைச் செலுத்தத்தவறின் ஒரு மாதம் சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது.