திருமலை மாவட்ட அரசியற்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட 5 பேரும் சரணடையவில்லையாம்!

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் உத்தரவை அடுத்து, சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட ஏனைய 5 பேரும் சரணடையவில்லை என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட 6 பேரது வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி நாட்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உட்பட ஒரு நாளேனும் குறித்த அமைப்பில் அங்கம் வகித்திருந்தால் சரணடைய வேண்டும் என்ற ஸ்ரீலங்கா இராணுவத்தின் உத்தரவுக்கு அமைய இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஏனையோர் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ச்சியாக விசாரணை இடம்பெற்று வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார்பில் அவரது மனைவியான வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா உள்ளிட்ட பன்னிரண்டு பேர் இந்த ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணை கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், இறுதி யுத்தத்தில் 58 ஆவது படைப்பிரிவிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள், புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தனவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதேவேளை குறித்த அறிக்கையானது முழுமையற்ற ஒரு ஆவணமாக காணப்படுவதாக அறிவித்த நீதிபதி, அனைத்து விபரங்களும் அடங்கிய முழுமையான ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிராளி சார்பில், புனர்வாழ்க்கு உட்படுத்தப்பட்டோர் தொடர்பிலான ஆவணங்களின்படி எழிலனுடைய பெயர் தமது பெயர்ப்பட்டியலில் இல்லை எனவும் எனவே அவர் இராணுவத்திடம் சரணடைவில்லை என்ற கருத்துப்படவும் பதிலளிக்கப்பட்டதாக குறித்த வழக்கை விசாரித்த சட்டத்தரணி க.ரத்னவேல் தெரிவித்தார்.

எது எவ்வாறிருப்பினும் இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் வைத்து இராணுவத்திடம் தனது கணவனை ஒப்படைத்தாக தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டுள்ள எழிலனின் மனைவியான வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், தொடர்ந்தும் நீதி கோரிய தனது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்