வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒரு குடையின்கீழ் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அதில் தாம் வெற்றிகண்டுகொண்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்பொழுது எங்களிடம் ஆயுத பலம் இல்லை. ஆகையால் தமிழ் மக்கள் அனைவரும் வேற்றுமை பாராது ஒருகுடையின்கீழ் அணிதிரண்டு எமது கோரிக்கைகளை முன்வைக்க முன்வரவேண்டும்.
அது மட்டுமல்லாது உலக நாடுகளின் தலைமைத்துவத்துடன், எமக்கு நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பேசி சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்குதல்கள் கொடுக்கவேண்டிய கடப்பாடும் எங்களுக்கு உண்டு.
இவ்வாறு செயற்படுவதன்மூலம்தான் எமக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளமுடியுமே தவிர வெறுமனே பிரேரணைகளை விடுவதில் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
எனவே ஒற்றுமை ஒன்றுதான் எங்களை முன்னெடுத்துச் செல்லும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.