இலங்கைக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் – ஐ.நா செயலாளர்

பலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்துவகையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்தார்.

இலங்கை தேசத்துடன் மிக நெருக்கமாக செயற்பட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த, உலகின் முன்மாதிரி தேசமாக எழுந்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக உதவும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸிக்குமிடையேயான சந்திப்பு நேற்று நியூயோர்க் நகரில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாரிஸ் மாநாட்டில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் மேற்கொண்டுவரும் முயற்சிகளை பாராட்டிய செயலாளர் நாயகம், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அபிவிருத்தி நடைமுறைகளுடன் இணைத்துக்கொள்வதற்கு சிறீலங்கா ஜனாதிபதி காட்டிவரும் கரிசனை குறித்தும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

தான் 1978 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்திருப்பதாகவும் சீகிரிய, தம்புள்ளை மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம்செய்திருப்பதாகவும் குறிப்பிட்ட செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ், அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான ஆணையாளராகவும் இலங்கைக்கு விஜயம்செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையுடனான ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்தி இலங்கை நாட்டுக்கும் மக்களுக்கும் முழுமையான உதவிகளை வழங்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்த சிறீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இதற்கு உலகின் அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பும் நட்புறவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொண்டு நல்லிணக்க கொள்கையுடன் பயணிக்கும் இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக தனிப்பட்ட முறையில் இலங்கைக்கு விஜயம்செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு சிறீலங்கா ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்