இலங்கையை கண்காணிப்பதற்கு விரைவில் வருகிறது ஐ.நா!

இலங்கையில் காணாமல் போனோர் விடயம் மற்றும் அரசியல் கைதிகளை தொடர்ந்து தடுத்து வைத்துள்ளமை போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், அது குறித்து ஆராய ஐ.நா. செயற்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

ஜோஸ் குவேரா தலைமையிலான, தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பான இச் செயற்குழு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள நிலவரங்களை கண்காணிப்பு செய்யவுள்ளதோடு, பாதிக்கப்பட்ட தரப்பினரையும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை குறித்த ஐ.நா. செயற்குழுவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக, அண்மையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரி, ஐ.நா. உயரதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐ.நா. செயற்குழுக்களின் கண்காணிப்பு விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்