கல்கிசைப் பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் முஸ்லிம் அகதிகள் பௌத்த தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதேநேரம் அவர்களை வடக்கில் தற்காலிகமாகத் தங்கவைக்க நாம் தயாராக உள்ளோம்.
இவ்வாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் .எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபையின் 106ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த அமர்வில் சிறப்பு விடயமாக சபையில் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்ததாவது:
காங்கேசன்துறை கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த மியன்மார் அகதிகள் சிலரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர். பின்னர் அவர்கள் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் ஊடாக கல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு சென்ற சில பௌத்த தீவிரவாதிகள் அந்த முஸ்லிம் மக்களைத் தாக்கியுள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அட்டகாசம் செய்துள்ளனர்.
பௌத்த தீவிரவாதிகளின் இந்த கொடூரமான செயலை வடக்கு மாகாணசபை கண்டிக்கின்றது. கல்கிசையில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைத்து மியன்மார் முஸ்லிம் மக்களையும் வடக்கு மாகாணசபை பொறுப்பேற்று அவர்களை எமது மண்ணில் தங்கவைக்க நாம் தயாராக இருக்கின்றோம் – என்றார்.
இதன்போது, ஒருசில பௌத்த பேரினவாதிகள் நடந்துகொண்டமையை வைத்து அனைவரையும் குறையாகச் சொல்லவேண்டாம் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெயதிலக கூறினார்.