தமிழனை உலகறிய செய்தவர் பிரபாகரன் -இயக்குனர் சிகரம் புகழாரம்

தமிழ் இனம் என்று ஒன்று உள்ளது.அதற்கு வீர வரலாறு இருக்கின்றது என்பதை உலகறியச்செய்தவர் பிரபாகரன் மட்டுமே என தெரிவித்துள்ள இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர் இல்லையென்றால் தமிழ் என்ற ஒன்று இருப்பதே தெரியாத நிலையிருந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முதுபெரும் கலைஞர்கள்,இளம் கலைஞர்கள்,ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இன்று சனிக்கிழமை காலை இலண்டன் அகிலன் பவுன்டேசனின் அனுசரணையில் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு கிரான்குளம் சீமூன் கார்டனில் நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பெ.பாரதிராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

காலம் எமது முகத்தில் கோடுபோட்டாலும் அந்த காலத்தில் நிலத்தில் கோட்டை கலைஞர்கள் இட்டுள்ளனர்.இந்த மண்ணில் எத்தனையோ கலைஞர்கள், கலைகள்.அதன் அத்தனை அறுவடைகளும் இந்த மண்ணையே சாரூம்.பாரதிராஜாவினை அழைத்து பாராட்டுகின்றீர்கள் என்றால் நான் ஏதோ ஒரு பதிவினை செய்துள்ளேன்.

கலைஞர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. கலைஞர்களை காலங்கள் பேசும்.அந்த கலைஞர்களின் படைப்புகள் பேசும். 76 வயதினை கடந்துள்ள நிலையிலும் கலையொன்றே மனிதனை தளர்ச்சியில்லாமல் வைக்கும் என்பதை உணர்ந்துள்ளேன்.

கலைஞர்கள் மட்டுமே சாதாரண மனிதர்களில் மாறுபட்டவர்களாகவுள்ளனர். எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கக்கூடியவர்கள் தான் கலைஞர்கள். கலைஞர்களுக்கு வயதே கிடையாது. குலைகள் இவர்களை காப்பாற்றுகின்றது. அவர்களுடைய எண்ணங்களை இளமையாக வைத்திருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் மட்டும் தான் தமிழ் மொழியை இன்னும் அழுத்தமாக காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தமிழ் மொழியை கட்டிக் காப்பதுபோல தமிழ் நாட்டில்கூட யாரும் தமிழ் மொழியை கட்டிக் காக்கவில்லை. அகநானூறு, புறநானூறு என்று எவ்வளவோ படைப்புகள் இருக்கின்றன.

ஆனால் உங்கள் படைப்புகளிலே தமிழ் இன்னும் சோர்ந்து போய்விடவில்லை. அதுவே உங்களுக்கு பெருமை தரும் விடயமாகும்.

மொழியின் மீதும் இனத்தின் மீதும் அழுத்தமான பக்தியை உங்களை விட யாரும் வைத்ததில்லை. நான் இந்த பூமியில் கால்வைக்கும் போதெல்லாம் பெருமையாக உணர்ந்தேன். தமிழ் நாட்டில் தமிழர்களும் தமிழச்சிகளும் வீர வரலாற்றை புத்தகங்களிலும் ஏடுகளிலும் தான் வாசித்துப் பார்த்திருக்கின்றோம். வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்ததில்லை.

வீர வரலாற்றை வாழ்ந்த தமிழர்களும் தமிழச்சிகளும் ஈழத்தில் தான் இருக்கின்றார்கள். சுத்தமான தமிழ் உரையாடல் இங்கிருக்கின்றது. இன்னும் நீங்கள் சோரம் போகவில்லை. இங்கு ஏற்பட்ட நெருக்கடிகூட நல்லதற்கோ என நான் நினைத்ததுண்டு. அந்த நெருக்கடிகளின் காரணமாக இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி அங்கு முளைத்து விருட்சமாக இருப்போம் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நம்மை அடையாளப்படுத்துவது ஈழமண் மட்டும் தான். கறுப்பாக ஒரு தமிழன் இருந்தான், அவன் வீர வரலாறு கொண்டவன் என அடையாளப்படுத்தியது பிரபாகரன் மட்டும் தான். இல்லாவிட்டால் தமிழ் என்ற ஒன்று இருப்பது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழினத்தை உலகிற்கு அடையாளம் காட்டியவர் பிரபாகரன் மட்டுமே.

இங்கிருக்கின்ற மூத்த கலைஞர்களுக்கு எனது கைகளால் விருது வழங்குவதைவிட அவர்களது கரங்களால் நான் ஆசீர்வாதம் வாங்கிச் செல்ல வேண்டும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்