வடக்கில் நீண்ட போர் நடந்துள்ளது. வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற முடியாது. வடக்கு முதலமைச்சர் வாய் திறந்தால் இனவாதக் கருத்துக்களே வருகின்றன. வடக்கின் கருத்துக்களுக்கு அமைய அரசு தீர்மானம் எடுக்கப் போவதில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன.
நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது:-
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வ ரனிடம் இருந்து வெளிவரும் கருத்துக்களை நாம் அவதானித்து வருகின்றோம். வடக்கில் இருந்து இராணுவத்தை நீக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாகக் கூறுகின் றார். அவர் என்ன கூறினாலும் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது தொடர்பாக அரசே முடிவெடுக்கும்.
வடக்கில் இருந்து ஒருபோதும் இராணுவம் வெளியேற்றப்படப் போவதில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் இராணுவத்தை வேறு பகுதிகளுக்கு மாற்றுவதா என்பது தொடர்பாகத் தீர்மானிக்கப்படும். எனினும் வடக்கில் இருந்து இராணுவம் முற்றாக அகற்றப்படாது.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவம் தேவை. அதை வடக்கில் மாத்திரம் நிராகரிக்க முடியாது. வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் எப்போதும் இனவாதத்தை கையில் எடுப்பவர். அவர் இனவாதத்தைப் பரப்பவே கருத்துக்களை வெளியிடுகின்றார்.
வடக்கில் முப்பது ஆண்டுகால போா் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தை வெளியேற்றி குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது. தற்போது வடக்கில் அமைதியான சூழல் நிலவுகின்றது. பாதுகாப்பை வழங்க சிவில் படைகள் உள்ளன. பொலிஸார் பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றனர். இராணுவத்தினர் வடக்கில் இருப்பதால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை.அரச தலைவரும், தலைமை அமைச்சருமே இது தொடர்பான தீர்மானம் எடுப்பார்கள். வடக்கு கூறும் கருத்துகளுக்கு ஏற்ப தேசியப் பாதுகாப்பை மாற்ற முடியாது.
ரோகிங்ய அகதிகள் இலங்கைக்கு வரவில்லை. அவர்கள் வேறு நாடுகளுக்கு படகில் செல்ல முயற்சித்தனர். நடுக்கடலில் உயிருக்காகப் போராடிய போது எமது கடற்படை மூலம் பாதுகாக்கப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுத் தங்க வைக்கப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையிடம் நாம் அவர்களை ஒப்படைத்தோம். விரைவில் அவர்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள சிலர் நடந்துகொண்ட விதம் வருத்தமளிக்கின்றது.
பெளத்த தேரர்கள் சிலர் இணைந்து குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது மோசமான காரணியாகும். ரோஹிங்ய முஸ்லிம்களால் நாட்டுக்கோ அல்லது தேசிய பாதுகாப்புகோ எந்த அச்சுறுத்தலும் இல்லை – என்றார்