காதல் திருமணம் செய்திருந்த இளைஞனும் பெண்ணும் தந்திரமாக அழைத்துச் செல்லப்பட்டு, வடமராட்சி வல்லைவெளியில் வைத்து இளைஞன் தாக்கப்பட்டார்.
பெண்வீட்டாரால் குறித்த பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இளைஞன் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது.
அச்சுவேலிப் பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த முதலாம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர் என்று கூறப்படுகிறது.
நேற்றுமுன்தினம் வலி.கிழக்கிலுள்ள விவாகப் பதிவாளர் ஒருவரிடம் இருவரும் சென்று பதிவுத் திருமணம் செய்துதருமாறு கோர பதிவாளர் அவர்களுக்குப் பதிவுத் திருமணம் செய்துவிட்டார்.
இருவரும் குடத்தனையில் இருப்பதை அறிந்த பெண்ணின் உறவுக்காரர் திருமணத்துக்குச் சம்மதிப்பதாகக்கூறி இருவரும் தங்கியிருந்த குடத்தனைக்குச் சென்றுள்ளனர்.
குறித்த பெண் காணாமல் போனமை தொடர்பான முறைப்பாடு ஒன்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் பெண் வீட்டுக்காரரால் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த முறைப்பாட்டை மீளப் பெறவேண்டும் என்று இருவருக்கும் கூறியுள்ளனர். அவர்கள் சம்மதித்ததும் இருவரும் ஓட்டோவிலும் பெண் வீட்டுக்காரர் ஹைஏஸ் வாகனத்திலுமாக அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
வல்லைவெளியில் திடீரென ஓட்டோவை தடுத்து நிறுத்தியது ஹைஏஸ். அதிலிருந்து இறங்கியவர்கள் இளைஞனைத் தாக்கிவிட்டு பெண்ணைத் தமது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர் என்று இளைஞனின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது.
இளைஞனைத் தாக்கிவிட்டு பெண்ணைக் கடத்திச் சென்றதாகத் தற்போது அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறை யிடப்பட்டுள்ளது.