யாழ்ப்பாணம் பண்டத்தரிப்புப் பொதுச் சந்தையில் இருந்து 500 மீற்றர் தூரம் வரை உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி வகைகள் விற்பனை செய்வது வலி.தென் மேற்குப் பிரதேச சபையால் தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச சபையின் கீழுள்ள பண்டத்தரிப்பு உப அலுவலகப் பணியாளர்கள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பண்டதரிப்பு பொதுச் சந்தையைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி வகைகள் விற்கப்படுவதால் சந்தை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நாளாந்தம் வாடகை செலுத்தி சந்தைக்குள் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் இதனால் பாதிப்படைகின்றனர் என்று வலி.தென் மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்துக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை அடுத்து உப அலுவலகத்தின் அதிகாரிகள் பிரதேச சபையின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாகப் பொதுச் சந்தையில் இருந்து 500 மீற்றர் சுற்று வட்டத்தில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடி மரக்கறி வகைகளின் விற்பனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையால் சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனவும் முன்னர் மதியம் ஒரு மணி வரை இயங்கிய மரக்கறிச் சந்தை தற்பொழுது இரவு 7 மணிவரை இயங்குகின்றது. வேலைக்குச் சென்று வீடு திரும்புவோர் இந்தச் சந்தையால் மிகவும் பயனடைகின்றனர் என வும் தெரிவிக்கப்பட்டது.