தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வாக்கெடுப்பு நடத்தமுடியும் – யாழ். பல்கலைக்கழகத்தில் முடிவு!

இடைக்கால அறிக்கையால் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதால் அதனை நிராகரிப்பதே மேல் எனவும், தமிழர் தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பொதுவாக்கெடுப்பை நடத்த முடியும் எனவும் யாழ். பல்கலைக்கழக ஒன்றுகூடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம், ஊடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி ரகுராம், சட்டத்துறை விரிவுரையாளர் கலாநிதி குமாரவேல் குருபரன் ஆகியோர் பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மூவருமே இடைக்கால அறிக்கையை முழுமையாக நிராகரிக்கவேண்டுமென உரையாற்றியிருந்தனர்.

சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் கருத்துத் தெரிவிக்கையில், இடைக்கால அறிக்கையானது முற்றுமுழுதாக ஒற்றையாட்சியையே தாங்கி நிற்பதாகவும் அதில் சமஷ்டி ஆட்சி முறைக்கான எந்தவொரு பண்புக்கூறுகளும் இணைக்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்கள், அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தை மீறாமல் வடக்கு கிழக்கு மக்கள், தங்கள் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கான வாக்கெடுப்பை கோர முடியும் எனவும் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு என்று கூறாமல், மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஒருமித்த குரலோடு எடுத்துக் காட்டுவதற்கான வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடியும் என அவா் சுட்டிக்காட்டினார்.

கற்றலோனி, குர்திஸ்த்தான் மக்கள் சுதந்திர தாயகத்தை மீட்டெடுப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியது போன்று தமிழர்களும் அவ்வாறான வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடியுமா என எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் ஜிரி.கணேசலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியானது சுயாட்சிக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டதெனக் குற்றஞ்சாட்டியஅவர், இடைக்கால அறிக்கையை முழுமையாக நிராகரிக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்