பூரண கதவடைப்பில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்ப்போம்! அமைச்சர் அனந்தி சசிதரன்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணம் தழுவியதாக வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருக்கும் பூரண கதவடைப்புப் போராட்டத்தில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்க்க முன்வருமாறு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தாயக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..,

தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்ட பின்பு தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவுகாண வேண்டுமென வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் சாகும்வரை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிக்காது உடனடியாக நிறைவேற்றுமாறும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ் பொது அமைப்புகளால் அறிவிக்கப்பட்டுள்ள வட மாகாணம் தழுவிய பூரண கதவடைப்பு போராட்டமானது தமிழர்கள் போராடித்தான் உரிமைகளைப் பெறவேண்டும் என்ற யதார்த்த நிலையை உணர்த்தி நிற்கின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் துணையோடு கைது செய்யப்பட்டு அதிகார அத்துமீறலின் கீழான அச்சுறுத்தல் நிலையில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே அடிப்படை ஆதார-மாகக்கொண்டு நீதிக்குப் புறம்பாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்திவரும் இலங்கை அரசின் தந்திரத்தனமான போக்கை எமது ஒன்றுபட்ட பலத்தின் மூலம் முறியடிக்க தாயக மக்கள் அனைவரும் இக்கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்பது காலத்தின் கட்டாயமாகும்.

அநீதியான முறையில் சிறைவாசம் அனுபவித்து வரும் 132 தமிழ் உறவுகளுக்காக நாங்கள் உறுதுணையாக இருக்கின்றோம் எனவும் அவர்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம் என்பதையும் இலங்கை அரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடித்துரைக்கும் விதமாகவும் நாம் இக்கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்போம் வாரீர்! எனத் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்