யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரு இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சரமாரியான வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை முற்பகல் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் முகத்தை மறைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சன நடமாட்டம் உள்ள பகுதியில் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வாள்வெட்டுச் சம்பவம் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கமராவில் பதிவாகியிருந்த நிலையில் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த காணொளியை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வந்த சாவகச்சேரி பொலிஸார் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

