டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பாடசாலை மாணவியும் தாய் ஒருவரும் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.
கலட்டி அம்மன் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சாரா (வயது -9) என்ற மாணவி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இவர் யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலையில் கல்வி கற்கிறார்.
இணுவில் கிழக்கைச் சேர்ந்த சிறிராஜா மல்லிகாதேவி (வயது – 49) என்பவரும் யாழ்ப்பாணம் போதனாமருத்துவமனையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இவர் குடும்பப் பெண்.
பாடசாலையில் கடந்த 11 ஆம் திகதி மாணவி சோர்வடைந்த நிலையில் இருந்தார். பெற்றோருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அவர்கள் வந்து மாணவியைத் தனியார் சிகிச்சை நிலையத்தில் காண்பித்து மருந்து மாத்திரைகள் பெற்று வீட்டில் வைத்துக் கவனித்து வந்துள்ளனர்.
காய்ச்சல் குறையவில்லை. 4 ஆம் நாள் (நேற்றுமுன்தினம்) தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காது நேற்று அதிகாலை மாணவி உயிரிழந்தார்.
டெங்கினால் உயிரிழந்த குடுபப் பெண்ணும் காய்ச்சல் காரணமாகத் தனியார் சிகிச்சை நிலையத்தில் மருந்து மாத்திரையைப் பெற்று வீட்டில் இருந்துள்ளார். காய்ச்சல் அதிகரித்த நிலையில் 4 ஆவது நாளான நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது உயிரிழந்துவிட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. மருத்துவ சோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் இருவரது சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.