கொழும்பு, கொலன்னாவை – சாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த மூன்று யுவதிகள் காணாமல் போயுள்ள சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகலில் இருந்து கொலன்னாவை–சாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான முலிதி வத்சலா பெரேரா என்ற திருமணமான பெண்ணும், 15 வயதான யசந்தி மதுஷானி பெரேரா மற்றும் 14 வயதான சவித்ரி ஆகிய இரு பாடசாலை மாணவிகளும் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை யசந்தி மதுஷானி பெரேரா என்ற மாணவி தனது சகோதரனிடம் தொலைபேசி ஊடாக அழைத்து தான் நலமாக இருப்பதாகவும் தன்னை தேடவேண்டாம் என கூறியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் மீண்டும் அந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க வேண்டாம் என கூறியுள்ளதாகவும் மாணவியின் சகோதரர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அயல் வீடுகளில் வசிக்கும் குறித்த மூவரும் ஆடை கொள்வனவு செய்வதற்காக கடைக்குப்போவதாக கூறி வெளியில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சென்ற மூவரும் இன்னும் வீடு திரும்பவில்லை என காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன மூவரில் 19 வயதான முலிதி வத்சலா பெரேரா என்ற யுவதிக்கு ஒன்றரை வயது குழந்தையொன்றும் இருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் தொலைபேசிக்கு தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் எவரது தொலைபேசி அழைப்புகளும் தொடர்பில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெற்றோரால் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைய பொலிஸார் மாணவிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இவ்வாறானதொரு தொலைபேசி அழைப்பு வந்தமையினால் குறித்த மாணவிகளின் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.