பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு கோரி அற்புதம்மாள் மனு!

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் சிறையிலிருந்தார். இந்த நிலையில், தந்தை உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, நிபந்தனையுடன் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் விடுவித்தது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

இதனிடையே, தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், பரோலை நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்குப் பேரறிவாளன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தந்தை குயில்தாசனுக்குத் தொடர் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும், பேரறிவாளனின் சகோதரிக்கும் சமீபத்தில் கற்பப்பை அறுவைசிகிச்சை நடந்திருப்பதன் காரணமாக அவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் இருவரது மருத்துவ சிகிச்சைக்கும் உடனிருந்து கவனித்துக்கொள்ள தனது மகன் பேரறிவாளனும் உடனிருந்தால் உறுதுணையாக இருக்கும் என்று எண்ணி பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்