இலங்கைக்கு நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் வெளியிட்ட அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இலங்கை அரசு பொறுப்புக் கூறல் விடயங்களை உள்நாட்டில் முன்னெடுக்கத் தவறினால் அது வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் என்று தாம் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தார் என்று கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
‘‘இதே சாரப்பட்ட ஐ.நா. அறிக்கையாளர் பப்லோ வெளியிட்ட அறிக்கையை நாம் வரவேற்கின்றோம்’’ என்றார் அவர்.
இலங்கை அரசு உள்நாட்டில் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கத் தவறினால் வெளிநாட்டில் அது முன்னெடுக்கப்படக்கூடும் என்று ஐ.நா. அறிக் கையாளர் தனது இலங்கைப் பயணத்தின் முடிவில் கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஐ.நா. அறிக்கையாளர் கூறியதை நாம் வரவேற்கின்றோம். நாம் இதே விடயத்தை முன்னரே வலியுறுத்தியிருந்தோம். பன்னாட்டுச் சமூகத்திற்கு அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர், 100 நாள்கள் வேலைத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியது. அதில் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று ஐ.நா. அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக் கூறல் விடயங்களை அரசு செய்யத் தவறினால் உலக நியாயாதிக்கத்தை அரசால் தவிர்க்க முடியாது. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் – என்றார்.