இலங்கை கூட்டாட்சி அரசாக இருக்கவேண்டும், சிங்கள மக்கள் விரும்பினால் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆட்சேபனை இல்லை.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளரும், வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலின்போது மகிந்த ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தனது ஆட்சி அமைந்து ஒருவருட காலத்தினுள் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அவரது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் எவ்வாறு அவருடைய அணியினர் புதிய அரசமைப்பு முயற்சிகளை எதிர்க்க முடியும்.
நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும் சமமாகவே மதிக்கின்றோம். அனைத்துக்கும் சம அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாகவுள்ளது.
இருப்பினும் பௌத்த மதத்தினை பின்பற்றும் மக்கள் பௌத்த மத்திற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் அல்லது தற்போதுள்ளதைப்போன்றே புதிய அரசமைப்பிலும் அமையவேண்டும் என்று விரும்புவார்களாயின் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை. எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை.
ஆனால் ஏனைய மதங்களுக்கான உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
இலங்கை அரசு கூட்டாட்சி அரசாக இருக்கவேண்டும் என்று நாம் கோருகின்றோம். நாடு பிரிவடைந்து செல்லப்போகின்றது என்று பரப்புரை மேற்கொள்பவர்கள் ஒரு விடயத்தினை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது.
இந்த நாட்டில் கூட்டாட்சி என்ற விடயத்தினை முன்னிலைப்படுத்தியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க. இவர் 1926ஆம் ஆண்டு கூட்டாட்சி அரசு முறைமையை வலியுறுத்தி ஆறு கடிதங்களை எழுதியுள்ளார்.
1944ஆம் ஆண்டு கம்னியூஸ்ட் கட்சியானது கூட்டாட்சி அரசு முறைமையை வலியுறுத்தியது. பீற்றர்கெலமன் மற்றும் வைத்தியங்கம் ஆகியோர் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக டொனமூர் ஆணைக்குழுவில் இந்த நாடு மூன்று அலகுகளாக இருக்கவேண்டும். வடக்கும் கிழக்கும் இணைந்து இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கண்டியத் தலைவர்கள் இரண்டு தடவைகள் கூட்டாட்சி தொடர்பிலான விடயத்தினை முன்வைத்துள்ளனர்.
தமிழர்கள் பிரிந்து செல்வதற்காகவே கூட்டாட்சியைக் கோருகின்றார்கள் என்பது தவறான அர்த்தப்படுத்தலாகும். தமிழர்களுக்கு முன்னதாக பெரும்பான்மை இனத்தவர்களே கூட்டாட்சி விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்கள்.
கூட்டாட்சி என்பது பிரிந்து செல்லும் விடயம் அல்ல. இலங்கை நாடு ஒரு நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அனைவரும் ஐக்கியமாகவும் சமத்துவமாகவும் நடத்தப்படும் சூழல் ஏற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அது அரசமைப்பு ரீதியாக தீர்மானிக்கப்பட வேண்டும்.
நாட்டின் இறைமையானது பெரும்பான்மையை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது. நாட்டு மக்கள் அனைவரும் தமது இறைமையைப் பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நாடு ஒன்றாக இருக்கும் அதேநேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் எமது மக்களும் பங்காளர்களாக வேண்டும்.
அதிகாரங்களை ஒரு தரப்பினரே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்ற நிலையில் மற்றைய தரப்பினர் எவ்வாறு அவர்களுக்கு தாங்களும் சமமானவர்கள் என்ற மனநிலைமை ஏற்படும். அதிகாரங்கள் பகிரப்பட்டு அனைவரும் சமத்துவமானவர்கள் என்ற மனநிலைமை உருவாக்கப்பட வேண்டியுள்ளது.
தமிழ் மக்கள் தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் அல்லர். தாங்கள் இலங்கையர்கள் என்ற நிலைமை தோற்றுவிக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் ஆட்சிக் கட்டமைப்பில் பங்கேற்கின்ற நிலமை உருவாக்கப்பட வேண்டும்.
13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராகப் புறக்கோட்டையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் முன்னாள் அரச தலைவர் மகிந்தவும் ஈடுபட்டடிருந்தார். தற்போது அவர் மாகாண சபைகளுக்கான தேர்தல் பிற்போடப்படுவதாக குற்றம் சாட்டுகின்றார், போராட்டங்களை நடத்துகின்றார். இது வேடிக்கையாக இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு-கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்ற கட்சி. எமது மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக எம்மால் செயற்படமுடியாது. தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும். வடக்கு – கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்றே எமது மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள்.
அவர்களின் உரிமைகளை, வேணவாக்களை மறுப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் திருப்தியடைக்கூடிய தீர்வொன்று கிடைத்தால் நாம் அதனைப் பெற்றுக்கொண்டு எமது மக்கள் முன்னால் செல்வோம். அவர்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது – என்றார்.