தமிழீழ முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (02) தமிழர் தாயகத்தில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமைச் செயலகத்திலும் முல்லைத்தீவில் உள்ள மாவட்டப் பணிமனையிலும் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்டப் பணியகத்தில், மாவட்டச் செயலாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ஈகைச்சுடரினை கட்சியின் புதிய குடியிருப்பு பிரதேச பொறுப்பாளர் இ.பிரபாகரன் ஏற்றிவைத்தார்.
தமிழ்;ச்செல்வனின் திருவுருவப் படத்திற்கான மலர்மாலையினை கட்சியின் மந்துவில் பிரதேச மகளிர் பொறுப்பாளர் சி.சிவதர்சினி அணிவித்தார்.
மலர் வணக்கம் மற்றும் நினைவுரைகளும் இடம்பெற்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமைப் பணிமனையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றினார்.
மேலும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02 ஆம் திகதி சிறிலங்கா படையினர் கிளிநொச்சியில் நடத்திய விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஐந்து போராளிகளும் வீரச்சாவடைந்தனர்.