தொடர் மழையிலும் சிரமத்தின் மத்தியில் போராட்டத்தைத் தொடர்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடுங்குளிர், நுளம்புக் கடிக்கு மத்தியிலும் சீரான உணவும் இன்றியே போராட்டத்தை முன்னெ டுத்து வருகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வடக்கில் தொடரும் மழை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களிலும் தீவிரமாகவே உள்ளது. தற்போதும் அதிகளவில் மழை பெய்துகொண்டிருக்கிறது.
மாவட்டத்தின் கேப்பாபிலவில் தமது 482 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறுகோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு 138 குடும்பங்களின் காணிகள் இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளன. அவர்களது போராட்டம் 249 நாள்களை எட்டியுள்ளது.
ஆனால் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. கடும் மழைக்கு மத்தியில் அவர்களது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் குழுவின் தலைவரான ஆ.வேலாயுதம் தெரிவித்ததாவது:
“இன்று 4ஆவது நாளாக மழை பெய்துகொண்டிருக்கிறது. சாதாரண சிறிய பந்தலுக்குள் நாம் முடங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
குளிரால் பீடிக்கப்பட்டுள்ளோம். நுளம்புத் தொல்லையும் ஒருபுறம் விடுவதாக இல்லை. தற்போது உணவும் ஏற்றதாக இல்லை. கஞ்சியும் கூழும் குடித்தே வாழ்வாதாரம் போராட்டத்துடன் கடந்துகொண்டிருக்கிறது.
மழை விடுவதாக இல்லை. நிலம் குளிர்ந்துவிட்டது. பந்தலைச் சுற்றி மழைவெள்ளம் வடிந்தோடிக் கொண்டிருக்கிறது. தூவானம் பந்தலுக்கு உள்ளே இருப்பவர்களையும் நனைக்கிறது. என்ன இருந்தாலும் முன்னரைவிட இப்போது நடத்துவதுதான் போராட்டம் என்று கூறுமளவுக்கு நிலமையை நாங்கள் உணர்ந்துகொண்டுள்ளோம்.
ஆனால் எமது கோரிக்கையை ஏற்று எமது காணிகள் விடுவிக்கும் வரை நாங்கள் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. எடுத்த முடிவிலிருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. போராட்டம் தொடரும்” என்றார்.
அங்கு பெய்துவரும் மழையால் பலதாழ் நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து முடங்கும் அளவுக்கு இன்னும் பாதிப்பு ஏற்படவில்லை என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.