வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாளை ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
‘எமது மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்களை வெளிக்கொணர எமது மண் எமக்கானது என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து மக்களை ஒருங்கிணைத்து இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது’ என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வசாவிளான் கிராம முன்னேற்றச் சங்க முன்றிலிலிருந்து ஆரம்பிக்கும் அமைதிப் பேரணி வயாவிளான் இராணுவக் குடியிருப்பு நுழைவாயிலை சென்றடையும். அங்கு வைத்து யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதிக்கான மனுக் கையளிக்கப்படும்.
அரச தலைவருக்கு முகவரியிடப் பட்ட கடிதத்தின் பிரதியே கட்டளைத் தளபதிக்கு அங்கு கையளிக்கப்படும். யாழ்ப்பாண மாவட்டச் செயலர், வலி.வடக்குப் பிரதேச செயலர் ஆகியோருக்கும் இதன் பிரதிகள் நேரில் கையளிக்கப்படவுள்ளன.