ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியிலிருந்து எப்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வெளியேறுவாரோ, அன்றே அவருடன் நேரடிப் பேச்சு நடத்த முன்வருவேன். நாங்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இன்னமும் இருக்கிறோம். எங்களைப் புறந்தள்ளி விட முடியாது. எதிர்காலத்தை யோசிக்காது தீர்மானம் எடுத்தால் அதற்கான விலையை அவர்கள் கொடுக்கவேண்டி வரும்.
இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளமை குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாங்கள் பேச்சுக்கு வரமாட்டோம் என்று ஒருபோதும் கூறவில்லையே. பேச்சுக்கு வர முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் பிடியிலிருந்து வெளியே வரவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுக்குள் இருந்து எப்போது அரச தலைவர் தலைமையிலான சுதந்திரக் கட்சி வெளியே வருகிறதோ, அன்றே அவர்களுடன் நேரடிப் பேச்சுக்கு நாம் செல்வோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் எடுபிடியாகவே இப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயற்படுகிறது. உண்மையான கட்சிப் போராளிகள் மனதளவில் என்னுடன்தான் உள்ளனர். இன்னும் சில வாரங்களில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதை நாடு அறிந்து கொள்ளும் – என்றார்.