தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற கட்சிகள் முரண்பாடான நிலைப்பாட்டை கொண்டுள்ள போதும் கூட்டமைப்பை பிளவு படாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள புளொட் செயலதிபர் அமரர் உமா மகேஸ்வரனின் நினைவாலயத்தில், “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” (டி.பி.எல்.எப்) மத்திய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய சித்தார்த்தன், ‘கடந்த சனிக்கிழமை ரெலோ, தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஆகியன இணைந்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தோம். அதிலே அடிப்படையில் எல்லோரும் இணைந்தே பயணிக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. அரசியலமைப்பு தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள நாங்கள் பலமாக இருக்க வேண்டும் என்பதனையும் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளை, உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக எதிர்வரும் 12 ஆம் திகதி கூடவிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டத்தில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும். அதேவேளை, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தேர்தலில் தனியாக போட்டியிடப் போவதாகவும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாது என்னும் தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். இருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கு சுரேஸ் பிரேமசந்திரனுடன் கலந்துரையாடுமாறு, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

