சிறுமியை வன்புணர்ந்த இளைஞனுக்குச் சிறை யாழ். மேல் நீதிமன்று தீர்ப்பு

சிறுமியை வன்புணர்ந்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்.

” பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 இலட்சம் ரூபா இழப்பீட்டை குற்றவாளி வழங்வேண்டும். அதனை வழங்கத் தவறின் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும். 10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்றும் தண்டனைத் தீர்ப்பை அறிவித்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.
யாழ்ப்பாணம், பொலிஸ் பிரிவில் 16 வயதுக்கு உள்பட்ட சிறுமி ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார். அது தொடர்பில் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் மீது சிறுமியை வன்புணர்ந்த ஒரு குற்றச்சாட்டு மட்டும் முன்வைக்கப்பட்டு சட்டமா அதிபரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை இருப்பதால் எதிரிக்கு எதிராக மரபணு அறிக்கையை வழக்குத் தொடுனர் முன்வைத்தார். இதனால் எதிரி குற்றத்தை இன்று மன்றில் ஏற்றுக்கொண்டார். எதிரியின் சட்டத்தரணி கருணை மனுவை மன்றில் முன்வைத்தார். இதனடிப்படையிலேயே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று மேற்கண்டவாறு தண்டனைத் தீர்ப்பை வழங்கியது. வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்படுத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்