கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் உறங்கும் மாவீரர்களுக்கு ஏறக்குறைய 10 வருடங்களுக்கு பின்னர் உணர்வுபூர்வ வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர்களின் ஆயிரக்கணக்கான உறவுகள் திரண்டு சென்று தமது வீரப் புதல்வர்களை நினைந்துருகி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
யாழ். மாவட்டத்திலேயே அதிகமான மாவீரர்கள் விதைக்கப்பட்ட கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை படையினர் ஆக்கிரமித்துள்ளமையால், துயிலும் இல்லத்திற்கு முன்னால் படையினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாவீரர்தின நிகழ்வில் வலிகாமம் வலயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர் கலந்துகொண்டனர்.
இங்கு மாவீரர்களுக்கு வானத்தில் சுடர் ஏற்றப்பட்டது. மாவீரர்களுக்கான சுடர் ஏற்றிய பலூன் வானில் பறக்கவிடப்பட்டது.
துயிலும் இல்லத்தை படையினர் ஆக்கிரமித்துள்ளமையால் அவர்களுக்கான தீபச்சுடர்களை ஏந்திய பலூன் வானில் பறந்து விடுதலைத் தீயைச் சுமந்து சென்றது.
இந்த மாவீரர் தின நிகழ்வில் மாவீரர் ஒருவரின் பெற்றோர் பொதுச் சுடரை ஏற்றினர். தொடர்ந்து ஏனையோர் சுடர்களை ஏற்றினர்.
2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வீதி மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சர்வதேச தொடர்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன், மற்றும் கட்சியின் பல உறுப்பினர்கள், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.