தமிழீழக் கோரிக்கையை, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்துவிட்ட நிலையிலும், தொடர்ந்து அந்தக் கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி, ஒருமித்த, பிரிக்கப்படமுடியாத நாட்டுக்குள் ஒரு தீர்வைக் காண்பதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையிலும், தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழர்கள் இன்றைய நிலையில், கைவிட்டுவிடக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.
தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனரும் ஈழத்தின் காந்தி என அழைக்கப்படுபவருமான தந்தை செல்வாவின் 41ஆவது நினைவு தின நிகழ்வு நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது கருணாரத்ன இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
தமது ஆதிக்கத்தின் கீழேதான் மற்றவர்கள் அடிபணிந்து செயற்படவேண்டும் என்ற நோக்கோடுதான் சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே இயங்குகிறார்கள் என்பதால், தமிழர்கள் தமது தமிழ் அரசுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பது அவரது வாதம்.
விக்கிரமபாகு கருணாரத்ன சிங்களத் தலைவர்கள் மத்தியில் நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒருவர். தமிழர்களின் பிரச்சினையை தமிழர்களின் பக்கமிருந்து பார்க்கவும் உய்த்துணரவும் கூடிய பக்குவம் கொண்டவர்.
நீண்ட காலமாகவே தமிழர்களின் உரிமைகளுக்காக வெளிப்படையாகக் குரல் கொடுத்து வருபவர். பௌத்த, சிங்கள பேரினவாதத்திற்குள் சிக்குண்டுள்ள பெரும்பான்மை மக்களின் வாக்கு ஆதரவைக் கொண்டிருக்காதவர் என்கிறபோதிலும், நாட்டின் அரசியல் குறித்துத் தீர்க்கமான பார்வையுடைய மிகச் சொற்பமான சிங்களவர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டுக்கூறக்கூடியவர். சிங்களப் பேரினவாதக் கூறுகளைப் பற்றிய நுட்பமான அறிவுடையவர்.
இன்று இருக்கும் அரசியல் களநிலவரத்தைப் பொறுத்தவரை தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழர்கள் கைவிட்டுவிடக்கூடாது என்று அவர்தான் கூறுகின்றார். அதாவது, பிரிக்கப்படமுடியாத ஒருமித்த நாட்டுக்குள் கூட்டாட்சித் தீர்வு என்று என்னதான் தமிழர்கள் காட்டுக் கத்தல் கத்தினாலும், சிங்களப் பெரும்பான்மைவாத ஆட்சியாளர்கள் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை, அத்தகைய ஒரு தீர்வைத் தரப்போவதுமில்லை என்பதைத்தான் அவர் குறிப்பிடுகின்றார்.
சிங்களவர்களிடம் மனோநிலை மாற்றம் ஏற்படவில்லை என்பதை அவர் இடித்துரைக்கின்றார். அத்தகைய மாற்றம் ஒன்று ஏற்படாத வரைக்கும் பிரிந்து செல்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு மாற்றுத் தீர்வு ஒன்று இல்லை என்பதைச் சொல்கிறார்.
சிங்களவர்களின் இந்தப் போக்குக் குறித்து, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்கூட அண்மையில் இதுபோன்றதொரு கருத்தைத் தெரிவித்திருந்தார். தனிநாட்டுக் கோரிக்கையைக் கூட்டமைப்புக் கைவிட்டுவிட்டமையைச் சிங்களவர்கள் மதிக்கவேயில்லை, கணக்கில்கூட எடுத்துக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
உண்மையும் அதுதான். தனிநாடு வேண்டும் என்று கேட்ட தமிழர்கள் ஆயுதப் போரில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டமையைச் சிங்களத் தலைவர்களும் சமூகமும் மதிக்கவேயில்லை.
போரில் தமிழர்களைத் தோற்கடித்ததால்தான் அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டார்கள் என்றும், வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் அதுபோன்றதொரு பிரிவினைக் கோரிக்கையை அவர்கள் முன்னெடுப்பார்fகள் என்றும் அச்சப்படுகின்றார்கள்.
கூட்டாட்சித் தீர்வு ஒன்றை நோக்கி முன்னேறுவது என்பது தமிழர்களுக்குத் தனிநாட்டைப் பிரித்துக்கொடுப்பதற்கான முயற்சிதான் என்று கருதுகின்றார்கள். அதனாலேயே தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பிரித்துக் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள்.
தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவதாக, பன்னாட்டுச் சமூகத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்த பின்னர்கூட ,சிங்களவர்களின் அச்சம் நீங்கவில்லை. அந்த அச்சம் நீங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையும் அதற்கான காரணத்தையும்தான் சொல்லியிருக்கிறார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.
தமிழ் அரசியல் கட்சிகள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டியதொரு கருத்து இது. தனிநாடு பற்றிப் பேசுவதே பாவம் என்கிற நிலையை எட்டிவிட்ட தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் இது கசப்பான செய்திதான் என்றாலும், தமது அரசியல் பாதையை மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயத்தில் அவை உள்ளன என்பதை உணர்த்திச் சென்றிருக்கின்றது விக்கிரமபாகுவின் பேச்சு.