தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்கு இந்த அரசுடன் அதன் பங்காளிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரான செல்வராசா கஜேந்திரன்.
யாழ்.ஊடக அமையத்தினில் இன்று புதன்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையினில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டுமென்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
இந்த ஆட்சியினை கதிரையேற்றுவதிலும் பின்னர் சர்வதேச ரீதியினில் காப்பாற்றுவதிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பே முன்னின்று செயற்படுகின்றது.ஆனால் இந்த அரசு ஆட்சிபீடமேறுமுன்னராக நிபந்தனைகளை விதித்து ஆதரவளிக்கலாமென பல தடவைகள் நாம் சுட்டிக்காட்டினோம்.அந்நிபந்தனைகளுள் அரசியல் கைதிகள் விடுதலையை உள்ளடக்க கோரியிருந்தோம்.
ஆனால் அது எதனையும் செய்யாது இந்த அரசிற்கு ஜநாவினில் மேலும் இரண்டுவருட கால அவகாசத்தை கூட்டமைப்பு பெற்றுக்கொடுத்துள்ளது.இப்போது அதன் தலைவர் ஜநா தலையிடவேண்டுமெனவும் சர்வதேசத்தை வர அழைப்பதும் திட்டமிட்ட நாடகமாகும்.எஞ்சிய தமிழ் மக்களையும் தாரை வார்க்க செய்யப்படும் சதியாக இருக்கமென நாம் சந்தேகிக்கின்றோம்.
தற்போது அனுராதபுரம் சிறையினில் உண்ணாவிரதப்போராட்டத்தினில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளினது போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம்.அவர்கள் எந்த வித நிபந்தனையுமின்றி விடுவிக்கப்படவேண்டும்.
அவர்களது கோரிக்கைகளின் படி சம்பவம் நடந்த நியாயதிக்கபகுதியான வவுனியா மேல்நீதிமன்றினில் விசாரணைகள் நடைபெறுவதே நியாயமாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.