20 ஆவது திருத்தம் கிழக்கு மாகாண சபையிலும் நிறைவேற்றம்

ஒரே நாளில் உள்ளூராட்சி தேர்தல் உள்ளிட்ட திருத்தங்களை கொண்ட 20 ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியுள்ளது.
இன்று (11) காலை 9.30 க்கு மாகாண சபை அவைத் தலைவர் சந்திரதாஸ கலபதி தலைமையில் கூடிய மாகாண சபை, அவையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் பிரசன்னமாகத நிலையில் கோரமின்மையால் மு.ப. 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்னர் பி.ப. 11.30 இற்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களின் பிரசன்ன மின்மை காரணமாக சபை நடவடிக்கை மீண்டும் பி.ப. 1.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் பிற்பகல் 1.00 மணியளவில் கூடிய சபை அமா்வில், முதலமைச்சா் ஹாபீஸ் நஸீா் அஹமட்டினால் 20 ஆவது திருத்த சட்ட பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இதன் போது எதிர்க்கட்சியினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டு, ஆளும் தரப்பு உறுப்பினா்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.

பெரும் அமளி துமளிக்கு மத்தியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக ஆளும்கட்சி உறுப்பினர்கள் 23 பேரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐ.ம.சு.மு. உறுப்பினர், கே.பி. பிரியந்த பத்திரணவும் வாக்களித்தனர்.

திருத்தத்திற்கு எதிராக 08 வாக்குகள் பெறப்பட்டன.

கிழக்கு மாகாணசபையில் கிழக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் தவிர்ந்து, ஆளும்கட்சியைச் சேர்ந்த 26 பேரும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 10 பேரும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

ஆளும் கட்சி
த.தே.கூ. – 11 பேர்
ஶ்ரீ.ல.மு.கா. – 08 பேர்
ஐ.தே.க. – 04 பேர்
ஐ.ம.சு.மு. – 03 பேர்

எதிர்க் கட்சி
ஐ.ம.சு.மு. – 09
தேசிய சுதந்திர முன்னணி – 01

இன்று (11) வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 23 பேரும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 09 பேரும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்