மட்டக்கிளப்பில் சோகம் நுண் கடன் செலுத்த முடியாமல் இளம் குடும்ப பெண் தற்கொலை!

மட்டக்களப்பில் இளம் குடும்ப பெண் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பல நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்தும் தவணை நாளுக்கு முந்திய தினம் குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 26 வயதுடைய செல்வம் யோகேஸ்வரி என்பவரே இவ்வாறு தன்னைத்தானே மாய்த்துக் கொண்டுள்ளார்.

கிராமங்களில் மக்களின் காலடிக்குச் சென்று நுண் கடன் நிதி வழங்கும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து குறித்த பெண் கடன் பெற்றுள்ளார்.

ஆகக் கூடுதலாக ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்ற 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவும் இந்தக் கடன் தொகையில் உள்ளடங்கும்.

அத்துடன் கட்டார் நாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றிருந்த அவரது கணவன் மாதாந்தம் குடும்பச் செலவுக்காக ஒரு தொகைப் பணமும் அனுப்பிக் கொண்டிருந்துள்ளார்.

கணவன் அனுப்பும் அந்தப் பணத்திலிருந்தே இதுவரை காலமும் பல நிறுவனங்களிடமிருந்தும் தான் பெற்ற கடனுக்கான தவணைப் பணத்தைச் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற கணவன் தொழில் புரிந்த நிறுவனம் மூடப்பட்டதன் காரணமாக நாடு திரும்பியுள்ள நிலையில் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் தவணைப் பணத்தைச் திருப்பிச் செலுத்த முடியாமல் மனைவி திண்டாடியுள்ளார்.

அத்துடன் குறித்த பெண் உறவினர்கள் பலரிடம் கடன் தவணைப் பணத்தைச் திருப்பிச் செலுத்துவதற்காக கடன் கேட்டும் உறவினர்கள் எவரும் பணம் கொடுக்க முன்வரவில்லை.

இந்நிலையில் 3 நிறுவனங்களுக்கு இன்று சுமார் 25 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை கடன் தவணைப் பணமாகத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது.

அதனால், மனமுடைந்த பெண் கடன் திருப்பிச் செலுத்தும் தவணைத் தினத்திற்கு முதல் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடற் கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்