தனக்கு உட்பட்ட கட்டலோனிய அரசைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த ஸ்பெய்ன் அரசு திட்மிட்டுள்ள நிலையில், இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்டலோனியாவில் மிகப்பெரும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஸ்பெய்னின் வருவாய், முதலீடு, சனத்தொகை, சுற்றுலாப் பயணிகளின் வருகை என்று அத்தனை விடயங்களிலும் கட்டலோனியாவின் பங்கு மிகவும் உச்சம்.
தனது செல்வங்களை ஏனைய மாகாணங்களுக்கு ஸ்பெய்ன் அரசு கொடுக்கிறது என்று காலாகாலமாக குற்றஞ்சாட்டி வருகிறது கட்டலோனியா. இதனால் கடந்த ஐந்து வருடங்களாக அங்கு தனிநாட்டுக் கோரிக்கைகளும் வலுப்பெற்றுள்ளன.
இது தொடர்பான வாக்கெடுப்பையும் கடந்த மாதம் முதலாம் திகதி கட்டலோனியா நடத்தியது. பதிவான 2.3 மில்லியன் வாக்குகளில் 90 சதவீதமானவை பிரிவதற்கு ஆதரவாக அமைந்தன.
இந்தத் தேர்தலை நடத்தியமைக்காக கட்டலோனிய அரசை வன்மையாகக் கண்டித்தது ஸ்பெய்ன். தற்போது கட்டலோனிய அரசைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை நடத்த ஸ்பெய்ன் திட்டமிட் டுள்ளது என்று தகவல்கள் வந்துள்ளன.
இதற்கு கட்டலோனிய மாகாண தலைவர் பூஜ்டியமன்ட் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஸ்பெய்ன் அரசுக்கு எதிராக அவர் கடும் கருத்துக்களையும் முன்வைத்திருந்தார். இந்த நிலையில் கட்டலோனிய மக்ககளும் பெருமளவில் திரண்டு தமது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் சுமார் 2 லட்சம் மக்கள் பங்கேற்றனர் என்று பன்னாட்டு ஊட கங்கள் செய்தி வெளியிட்டன.